Tuesday, July 2, 2019

மில்டூறா அதிகாலை -1

இற்றைக்குச் சரியாக ஈராண்டுகளின் முன்பு மில்டூறாவில் அதிகாலை சூரிய உதயத்தைப் பார்த்த படத்தைக் கண்டதில் மில்டூறா பற்றி எனது பயண நினைவுகளைப் பகிர எண்ணம் வந்தது.

நீண்டகாலமாகவே இதுதொடர்பில் ஆர்வமிருந்தாலும் இப்போதெல்லாம் எழுதுவதற்கு இருக்கும் பஞ்சியினால் அது சாயத்தியப்படவில்லை. அதைவிட, நான் சேமித்து வைத்திருந்த பல படங்கள் தொலைந்துபோனதும் ஒரு காரணம்.
மனைவியின் கணினியிலும் தொலைபேசியிலும் சேமிக்கப்பட்டிருந்த பல படங்கள் இப்போது தோண்டியெடுக்கப்பட்டதால் சிலவற்றைப் பகிரலாமென எண்ணம் வந்தது.



முந்தியநாள் இரவு ஒன்பது மணியளவில் மெல்பேணிலிருந்து இரண்டு கார்களில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட ஆறுமணித்தியாலப் பயணம். வழமையாக துார இடங்களுக்குரிய எனது பயணத் திட்டமிடலில் இந்தநேரம்தான் தெரிவாக இருக்கும். அதிகாலை 3 மணியளவில் போய்ச்சேர்ந்து 3மணிநேரம் துாங்கினால் ஒருநாள் சேமித்துவிடலாமென்பது எனது திட்டம். மில்டூறாப் பயணமும் அப்படித்தான்.

ஆனால் அன்றைய இரவு மில்டூறாவில் வழமையைவிட அதிக குளிர் என்பது வானிலை எதிர்வுகூறலாக இருந்தது. நாங்கள் போயச்சேரும்போது -3°C. 

எனக்கும் மனைவிக்கும் மில்டூறாவில் அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்கவேண்டுமென்பது நீண்டநாள் விருப்பம். என்னவோ தெரியவில்லை மில்டூறா மறே  (murray river)ஆற்றங்கரையில் சூரியனின் உதிப்பும் மறைவும் புகைப்படமாக எடுத்துப்போடுவது அப்படி பிரபலம். இன்றும் முகநுாலில் அதற்கென்று ஒரு கூட்டமே உருவாகிவிட்டிருக்கிறது.

சரி, எந்தக் குளிரென்றாலும் அன்று ஆற்றங்கரைக்குப் போவதென்பது முடிவு. அதிகாலை 3 மணிக்குப் போய்ச் சேர்ந்து அந்தக் குளிரில் படுத்துறங்கி அதிகலை ஐந்தரைக்கு எழுந்து நானும் மனைவியும் ஆற்றங்கரைக்கு ஓடினோம். மறவன் அப்போது இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருந்ததால் பேத்தி அவனைக் கொண்டுபோக விடவில்லை.

ஆற்றங்கரையை அடையும்போதும் வெப்பநிலை -3°C தான். காலை 8 மணிக்குத்தான் -1°C க்கு வந்தது. நாங்கள் என்னதான் அதிகாலையில் போய்ச் சேர்ந்தாலும் சூரியன் வந்ததென்னவோ 7 மணிக்கும் பிறகுதான்.

மெல்பேர்ண் தலைநகரமாக இருக்கும் Victoria மாநிலத்தையும் சிட்னி தலைநகரமாக இருக்கும் NSW மாநிலைத்தையும் பிரிப்பது இந்த மறே ஆறுதான். அதாவது தண்ணிக்கு இந்தப்பக்கம் விக்ரோறியா, அந்தப்பக்கம் NSW. இரண்டையும் இணைக்கும் பாலத்துக்கு மேலால் சூரியன் வருவதைப் படமெடுப்பதுதான் பிரசித்தம். அந்தக் குளிரில் எங்களுக்கு முதலே வந்து துண்டுபோட்டு இருந்தவர்கள் இரண்டு ஐரோப்பியர்கள். அடுத்த சோடி நாங்கள். விசயம் தெரிந்த உள்ளுர்க்காரர்கள் 7 மணிக்கு கமராக்களோடு வந்துசேர்ந்தார்கள்.

வெறுங்கையோடு கமராவை வைத்திருந்த எனக்கு ஐந்து நிமிடத்திலேயே கை விறைத்துவிட்டது.  ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டு அங்கு காத்திருந்து படம் பிடித்தோம். அதுவொரு அலாதியான  நினைவு. சூரியன் உதிப்பதைப் பார்ப்பதில் அப்படி என்ன அலாதி அனுபவம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. 

ஆதிகால மனித சமூகம் சந்ததி சந்ததியாக ஒவ்வொருநாளும் பார்த்து இரசித்த அந்தக் காட்சி, தாயகத்தில் அவ்வப்போது இரசித்துப் பார்க்கக் கிடைத்த அந்தக் காட்சி, புலம்பெயர்வாழ்வில் முற்றிலும் இழந்துவிட்ட அந்தக் காட்சி அன்றைய நாளில் அதுவும் புகைப்படப் பிரியர்கள் விரும்புகின்ற இடத்திலும் கோணத்திலும் பார்க்கக் கிடைத்தது. 

மறே என்கிற அப்பெரு நதிக்கரையில் சூரிய உதயத்தைப் பார்க்க நின்ற அந்த இரண்டுமணி நேரத்தில், நவீன உலகை மறந்து மனித இனத்தைப் பரிணமிக்கவைத்த நதியோர வாழ்க்கைமுறையைக் கற்பனையில் உணர்ந்தேன். 

அதற்குப்பின்பு எவ்வளவோ தடவைகள் மில்டூறா போய்வந்தாலும் அதிகாலையில் சூரியனைப் பார்க்க ஆற்றங்கரை ஓடும் என்னை ஒருமாதிரித்தான் பார்க்கிறார்கள். ஆனாலும் எனக்கு அலுப்பதேயில்லை. 

அடுத்தநாள் யார் தடுத்தாலும், எந்தக் குளிரென்றாலும் மறவனை அழைத்துவருவதென்று நானும் மனைவியும் தீர்மானித்துக்கொண்டோம். 
மறுநாள் இன்னும் பரவசமான அனுபவம் சூரிய உதயத்தில் கிடைத்தது. அதுபற்றி நாளை பார்ப்போம்.

======================================
மில்டூறா (MILDURA) குறித்த பதிவுகள் தொடரும்.






°C

°C

Thursday, November 22, 2018

விக்ரோறிய மாநிலத் தேர்தல்- 2018



அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 24 நவம்பர் அன்று நடைபெறவுள்ளது. முன்வாக்குப்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில அவைத்தேர்தலில் 2010இல் லேபர் கட்சியிடமிருந்து ஆட்சியை லிபரல் கட்சி கைப்பற்றியது. ஆனால் அரைநூற்றாண்டு காலத்தில் ஒருமுறையும் நிகழ்ந்திராதவண்ணம் ஒரு தவணையோடு ஓர் அரசாங்கத்தை மக்கள் மாற்றி 2014இல் மீண்டும் லேபர் கட்சியிடமே கொடுத்தார்கள். இம்முறை 2018இல் என்ன நடக்குமென்று வருகிற கிழமை தெரிந்துவிடும்.
இந்நேரத்தில் விக்ரோறிய மாநிலத்தின், குறிப்பாக மெல்பேர்ண் நகரமும் அதை அண்டிய பகுதிகளின் அசைவியக்கத்தைப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக லேபர், The Coalition (Liberals + Nationals) என இருகட்சிகளே கோலோச்சிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அரசியலில் மூன்றாவதாக Greens கட்சியும் பலம்பெற்று வந்துகொண்டிருக்கின்றது. 2010ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மத்திய நாடாளுமன்றின் கீழவைக்கு முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரை கிறீன்ஸ் கட்சி பெற்றது. அது நூற்றாண்டுகாலம் லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய மெல்பேர்ண் தொகுதியிலேயே பெற்றுக்கொண்டது. இன்றுவரை அக்கட்சி பெற்றுக்கொண்ட ஒரேயொரு மத்திய நாடாளுமன்ற கீழவை இருக்கை அது மட்டுமே. இப்போதைக்கு இந்த மெல்பேர்ண் தொகுதி கிறீன்ஸ் கட்சியிடமிருந்து பறிபோவதற்கு வாய்ப்பில்லை.

அதேபோல் விக்ரோறிய மாநில நாடாளுமன்றத்துக்கான 2014ஆம் ஆண்டு தேர்தலும் மிக முக்கியமானது. நீண்டகாலத்துக்குப்பின்னர் ஒரே தவணையில் ஒரு கட்சியிடமிருந்து ஆட்சி மாறியது மட்டுமல்ல, முதன்முறையாக கிறீன்ஸ் கட்சி இரண்டு ஆசனங்களை கீழவையில் பெற்றுக்கொண்டதும் இந்தத் தேர்தலில்தான். அதுவும் மெல்பேர்ண் நகரத் தொகுதியை கிறீன்ஸ் எடுத்துக்கொண்டது. நகரின் மையத்துக்கு அருகாக இருக்கும் prahran தொகுதியையும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் (முதன்மை வாக்குகளில் மூன்றாமிடத்திலிருந்தாலும் தெரிவு வாக்குகளால் தொகுதியை வென்று) கிறீன்ஸ் கட்சி வென்றது.

பின்னர் கடந்த ஆண்டு northcote தொகுதியின் லேபர்கட்சி உறுப்பினர் புற்றுநோயால் சாவடைய அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. லேபருக்கும் கிறீன்சுக்கும் இடையில்தான் போட்டி. மிகக்கடுமையான போட்டி. இதிலே லிபரல் கட்சி வேட்பாளரையே நிறுத்தாமல் ஒதுங்கிக் கொள்ள, கிறீன்ஸ் கட்சி அந்தத் தொகுதியை வென்று தனது மூன்றாவது நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. அதுமட்டுமன்றி பூர்வகுடியைச் சேர்ந்த பெண்ணொருவரை முதன்முறையாக விக்ரோறிய நாடாளுமன்றத்துக்கும் அத்தேர்தல் முடிவு அனுப்பியது.

மெல்பேண் நகர மையமும், அதிலிருந்து வடபுறமாக விரியும் அடுத்தடுத்த பட்டினங்களும் லேபருக்கும் கிறீன்சுக்கும் இடையில்தான் போட்டியாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் 'இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை' என்பதைப் போல லிபரல் கட்சி நடந்துகொள்கிறது. இந்தப்பகுதியில் நடந்த கடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக்கொண்டது.
இப்போது richmond தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது லிபரல் கட்சி. இம்முறை richmond தொகுதி கிறீன்ஸ் கட்சியிடம் விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைவிட brunswick  தொகுதியும் லேபரிடமிருந்து கிறீன்சிடம் விழக்கூடும். ஏற்கனவே இருக்கின்ற 3 தொகுதிகளோடு இந்த இரண்டையும் கிறீன்ஸ் கைப்பற்றினால் ஒரு பலமான பேரம்பேசும் நிலைக்கு வந்துசேரும்.

இன்றிருக்கும் நிலைவரப்படி கிறீன்ஸ் கட்சி மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கட்சிக்குள் ஏராளமான பிரச்சனைகள். தேசிய அளவில் மட்டுமன்றி மாநில அளவிலும் சிக்கல்கள். சமந்தா இரத்தினம் மாநிலக் கட்சியின் தலைவராக வந்து ஓராண்டுக்குள் மாநிலத் தேர்தலை கட்சி சந்திக்கிற நிலைமை ஒருபுறம், என்றுமில்லாதவாறு கிறீன்ஸ் கட்சிக்குள் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுக்கள் சரமாரியாக முன்வைக்கப்படுகின்றமை இன்னொருபுறம் என்று தொடர்ச்சியாக அடிமேல் அடிவிழுந்துகொண்டிருக்கிறது. செனற்றராக போட்டியிட்ட ஒரு பெண் மூன்றாண்டுகளுக்கு முன்பு 'எப்படி அங்காடிகளில் திருடுவது' என்று முகநூலில் எழுதிய குறிப்புகள் தற்போது வெளிவந்து அப்போட்டியாளர் தேர்தலில் இருந்து விலத்தியுள்ளார். இப்போது இன்னொரு வேட்பாளர்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

கிறின்ஸ் கட்சி குறித்துத் தனியாக எழுதவேண்டும். புதிதாகக் களமிறங்கியிருக்கும் Victorian Socialist கட்சி குறித்தும் அதிகம் எழுத வேண்டும்.

தற்போதைய நிலைவரப்படி முடிவுகள் குறித்த எனது கணிப்பு:

லேபர்கட்சி தனித்து ஆட்சியமைப்பது 90%
லேபர்கட்சியும் கிறீன்சும் இணைந்து ஆட்சியமைப்பது 9%
Coalition தனித்து ஆட்சியமைப்பது 0.5%
Coalition கிறீன்சும் இணைந்து ஆட்சியமைப்பது 0.5%